சீர்காழி அருகே வாய்க்காலில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் நடத்துநர், ஓட்டுநர் உள்ளிட்ட 47 பேர் காயமடைந்தனர்.
நாகை மாவட்டம், சீர்காழியிலிருந்து பழையாருக்கு அரசு நகரப் பேருந்து சனிக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தது. பனி மூட்டம் காரணமாக சாலையோரம் உள்ள பகுதி சரிவர தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பேருந்து மடவாமேடு காளியம்மன் கோயில் அருகே உள்ள திருப்பத்தில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரான நிம்மேலி கீழவரவுக்குடி மு.ஞானப்பிரகாசம் (41), நடத்துநரான மாதிரவேளூர் கிராமத்தைச் சேர்ந்த க.பெரியார் (35) மற்றும் பயணிகள் கூழையாரைச் சேர்ந்த பாப்பாத்தி (60), ஏலாச்சி (35), காந்திமதி (56), தொடுவாயைச் சேர்ந்த பட்டு (45), அஞ்சம்மாள் (30), மடவாமேடு அபூர்வம் (55), சந்திரா (35) உள்ளிட்ட 47 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த எம்எல்ஏ பி.வி.பாரதி உள்ளிட்ட அதிமுகவினர் மற்றும் அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் மட்டும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து புதுப்பட்டினம் போலீஸூர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.