ஆலங்குடி: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு தடுத்து நிறுத்துவோம் என்றார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
நெடுவாசலில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்ற அவர், மேலும் பேசியது:
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டத்தின் மூலம், நாம் நமக்காக போராட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எரிவாயுவால் எந்த பாதிப்பும் வராது என்று சிலர் கூறுகின்றனர். நைஜீரியாவில் வளர்ச்சி குன்றியதற்கான காரணத்தை எரிவாயு திட்டத்தை ஆதரித்து பேசுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்தால், பொருளாதார வளர்ச்சி ஏற்படலாம். ஆனால், அதன் மூலம் கிடைக்கும் தங்கத்தட்டில் சோறு இருக்காது என்பதையும் உணர வேண்டும். வீட்டிற்கு ஒரு விவசாயி அவசியம். தமிழ்நாட்டில் நாம் ஒற்றுமையோடு இருந்து எரிவாயு திட்டத்துக்கு எதிராக போராடி அதை தடுத்து நிறுத்துவோம். மண்ணின் அடையாளத்திற்காகவும், விவசாயத்தை காக்கவும் போராடுவோம் என்றார்.