பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் புதுச்சேரியில் ரூ.300 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
மத்திய அரசுடன், வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (யு.எஃப்.பி.யு) நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியது. அது தோல்வியில் முடிந்தது. இதனால் பிப்ரவரி 28-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வங்கி ஊழியர்களுக்கான அடுத்த கட்ட சம்பள விகிதத்தை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். வங்கித் துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் மட்டும் 286 வங்கிக் கிளைகளில் பணிபுரியும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக புதுவை பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் புதுச்சேரியில் ரூ.300 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. வங்கிகளில் பணம் போடவும், எடுக்கவும் வந்த பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.