புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் நவனீத் கவூர் (24). இவரது நண்பர்கள் அபீத் திரிபாதி (24), அன்சூல் (23). மூவரும் கோவையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரிக்கு சனிக்கிழமை சுற்றுலா வந்தனர்.
புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள், அன்று மாலை புதுக்குப்பம் கடற்கரைக்கு வந்து அங்கு கடலில் குளித்துள்ளனர். அப்போது, மூவரும் ராட்சத அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். இதை அறிந்த அந்தப் பகுதியில் இருந்த மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று மூவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில், நவனீத் கவூர், அபீத் திரிபாதி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிந்தது. ஆபத்தான நிலையில் இருந்த அன்சூல் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து, தவளக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.