தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 30 ஆயிரம் பேர் இருப்பதால், இந்தத் தேர்வு தற்போது நடத்தப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார். இது கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானதாகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டிய தகுதி வழங்கும் நடவடிக்கை ஆகும்.
விதிகளின்படி மத்திய அரசால் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை ஜூன் மாதம் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றாலும், அதைக் கருத்தில் கொள்ளாமல் ஆண்டுதோறும் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வில் வெற்றி பெறுவது ஆசிரியர் பணிக்கான தகுதிதானே தவிர, உத்தரவாதமல்ல.
ஆசிரியர் பணிக்கு தகுதிபெற விரும்புவோருக்கு அதற்கான தேர்வை நடத்த வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், அந்தக் கடமையைச் செய்யாததன் மூலம் 4 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பேர் ஆசிரியர் ஆவதற்கு தகுதி பெறும் உரிமையை தமிழக அரசு மறுத்துள்ளது.
எனவே, ஆண்டுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோரைக் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.