ஜல்லிக்கட்டை அனுமதிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜன.21) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
காவிரிப் பிரச்னை, கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழகத்துக்கு நிவாரணம் அளிப்பது, பொங்கல் விடுமுறை விவகாரம் ஆகியவற்றில் மத்திய அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
இதைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்றத் தலையீட்டிற்கு வாய்ப்பளிக்காதவாறு அவசரச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு கொண்டு வர வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.