புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 எம்.எல்.ஏ.,க்களை நான் பரிந்துரை செய்யவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
மக்களாட்சிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைச் சேர்ந்தவர்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.
இதை கண்டித்தும், மாநில அரசின் உரிமைகளைப் பறித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை சார்பில், இன்று சனிக்கிழமை (ஜூலை 8) மாநிலம் முழுவதும் காலை 6 மணி முதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் கிரண்பேடி கூறுகையில், 3 நியமன எம்.எல்.ஏ.,க்களை நான் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசு நேரடியாக நியமித்தது. இவ்விவகாரத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது என்றும் நியமன உறுப்பினர் விவகாரத்தை அரசியல் ஆக்குகின்றனர் என கூறினார்.
மேலும், முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரி அரசின் வருமானம், வளர்ச்சி பாதிப்பு ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் பேருந்துகள் இயக்கப்படவில்லை, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, துணைநிலை ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்படுள்ளது.