சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பெண் ஊழியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில், தற்போதுதான் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் முழுக்க 14 இயங்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அதிகாரி கூறினார்.
'கேமராக்கள் பொருத்தப்பட்டு தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 2 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. ரயில் நிலையத்தின் அனைத்துப் பகுதிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்குள் வருவதும், ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் வழிகளும் இதில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாம்பலம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் நிலைய பாதுகாப்புப் படையினர், இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிப்பார்கள். இந்த கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததும் முறைப்படி துவக்கி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மற்ற ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பற்றி கேட்டதற்கு, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நிர்பயா நிதியில் இருந்து தேவையான நிதி ஒதுக்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கப்பட்டதும் சென்னையில் உள்ள சுமார் 70 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி இன்னும் இரண்டு அல்லது 3 மாதங்களில் தொடங்கும் என்று கூறினார்.
தற்போது குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டுமே, அதாவது சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் மட்டுமே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி சுவாதி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.