தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் (எம்எல்ஏக்கள்) ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்திக் கொடுப்பது எல்லா மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டு, விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறாமல் உள்ளன. மேலும் 2017 - 18-ஆம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை சுமார் ரூ.41 ஆயிரம் கோடி என்றும், கடன் சுமை ரூ. 3 லட்சம் கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு 100 சதவீதம் மாத ஊதியத்தை உயர்த்தியுள்ளது உடனடி அவசியம் இல்லாத அறிவிப்பாகும். மாறாக படிப்படியாக மாத ஊதியத்தை உயர்த்த வேண்டும்.
பன்றிக்காய்ச்சல்: நாடு முழுவதும் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. எனவே, தமிழக சுகாதாரத்துறை அனைத்து சுகாதார நிலையங்களிலும் தனிக்கவனம் செலுத்தி, மாதந்தோறும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சல், வைரஸ், டெங்கு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.