தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆகஸ்ட் 31 -ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய ஏன் முயற்சிக்கக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு அக்டோபரில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை எனக் கூறி தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்பட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ப்போது தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆகஸ்ட் 31 -ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய ஏன் முயற்சிக்கக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது ஆஜரான மாநில தேர்தல் ஆணைய தரப்பு மூத்த வழக்குரைஞர் பி.குமார், 'அது நடைமுறை சாத்தியமற்றது என்றார். புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளது. ஆனால், கடந்தாண்டு டிசம்பரில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் உள்ள சில அம்சங்களே தேர்தல் அறிவிப்பாணை வெளியிட தடையாக உள்ளது' என்றார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 26 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.