கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி எங்கள் அணிக்கு வந்தால் அவரை ஏற்றுக்கொள்வோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவைக்கு சனிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காகத் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி இருப்பதாக ஊடகச் செய்திகள் மூலமே தெரிந்து கொண்டேன். அவர் எங்களிடம் வந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வோம்.
தமிழக விவசாயிகள் தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவது அவர்களின் தனிப்பட்ட முடிவு.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அரசு மீது நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
ஆனால், அவர் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்கு வந்தால் அவரது விமர்சனங்களுக்குப் பதில் சொல்வேன் என்றார் அவர்.
பேட்டியின்போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மாவட்ட, மாநகர அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கார் மூலம் திருப்பூர் புறப்பட்டுச் சென்றார்.