நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு மடிக்கணினிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் தற்போது பொது விநியோகத் திட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
பொது விநியோகத் திட்டத்தின் பயன்பாட்டுக்கென நுகர்பொருள் வாணிபக் கழகம் சொந்தமாக பல கிடங்குகளையும், வாடகை கிடங்குகளையும் பராமரித்து வருகிறது.
மேலும், அமுதம் பல்பொருள் அங்காடிகள், அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள், நியாய விலைக் கடைகள், நவீன அரிசி ஆலைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள், சமையல் எரிவாயு அலகுகள் ஆகியவற்றை பராமரித்து வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அத்தியாவசியப் பொருள்களின் கொள்முதல், இருப்பினை கவனிக்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளை கண்காணிக்க வசதியாக, அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்கள், தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் என 51 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக ஏழு பேருக்கு மடிக்கணினிகளை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.காமராஜ், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூட்டுறவு, உணவுத் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.