9 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 107 டிகிரி வெயில் பதிவானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கொடைக்கானலில் 39 மி.மீ., உதகையில் 11 மி.மீ.,மழை பதிவாகி உள்ளது. இதுதவிர திருச்சி, கன்னியாகுமரி, குன்னூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியது: வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் என்றனர்.
9 இடங்களில் சதம்: 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
திருத்தணி 107
வேலூர் 105
திருச்சி, மதுரை 104
கரூர் பரமத்தி 103
கடலூர், நாகப்பட்டினம், சேலம், தூத்துக்குடி 100
சென்னை 99