ஆவின் உட்பட அனைத்து நிறுவன பால் பாக்கெட்டுகளும் சோதனை செய்யப்படும்: ராஜேந்திர பாலாஜி
சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் உட்பட அனைத்து நிறுவன பால் பாக்கெட்டுகளும் சோதனை செய்யப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் கலக்கப்படுவது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழ் செய்தி ஊடகம் ஒன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட கேட்டதற்கு, பாலில் ரசாயனம் கலப்பது தொடர்பாக நுகர்வோர் ஒருவரே வழக்கு தொடர்ந்ததை வரவேற்கிறேன்.
தமிழகத்தில் ஒரு சில தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனத்தை கலக்கின்றன. எனினும், அனைத்து நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளும் சோதனை செய்யப்படும். ஆவின் பாலும் சோதனை செய்யப்படும். ஆவின் தரமான பால் என்பது சோதனை மூலம் நிரூபிக்கப்படும். தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் முன்கூட்டியே எச்சரித்தேன் என்று தெரிவித்தார்.
பாலில் ரசாயனம் கலப்பதாக தெரிய வந்த பிறகும், அவற்றை விற்பனை செய்வதை அரசு தடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு, இது ஜனநாயக நாடு. ராணுவ ஆட்சி நடக்கவில்லை. எதையும் தடாலென செய்து விட முடியாது. ஒவ்வொரு நடவடிக்கையையும் இன்னென்ன விதத்தில்தான் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. அதன்படிதான் செய்ய முடியும் என்று பதில் அளித்தார்.
உறுதியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.