பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்புக் குறைக்கப்பட்டாலும் பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்வுக்கு முன்-பின்... விற்பனை, தானம், பரிமாற்றம் ஆகியவற்றுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதமாக இருந்தது. இந்த ஒரு சதவீதமானது தற்போது 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தைப் பதிவு செய்ய வேண்டுமானால், தற்போதுள்ள உத்தரவுப்படி பதிவுக் கட்டணமாக ரூ.6,000 செலுத்தினால் போதும். 4 சதவீத உயர்வுக்குப் பிறகு, பதிவுக் கட்டணமாக ரூ.24,000 செலுத்த நேரிடும். பதிவுக் கட்டணத்தை அதிகரித்து, வழிகாட்டி மதிப்பை அரசு குறைத்துள்ளதாக சார்-பதிவாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடனடியாகப் பதியப்படுமா? வழிகாட்டி மதிப்பின்படி நிலங்கள் ஏதும் விற்கப்படுவதில்லை. பல இடங்களில் வழிகாட்டி மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடையே அதிக வேறுபாடுகள் இருக்கின்றன. இதனால், வழிகாட்டி மதிப்புக் குறைப்பால் எத்தகைய நன்மையும் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை.
அதேசமயம், நேரடியாக சொத்தை வாங்குபவர் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். இந்த உயர்வு நிச்சயமாக மக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும். வழிகாட்டி மதிப்பு குறைப்பால் நேரடியான நன்மைகள் ஏதும் கிடைக்காது என சார்-பதிவாளர் அலுவலக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதிவுக் கட்டணம் உயர்வால், சொத்துகள் உடனடியாகப் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.