சென்னை: நடிகர் சிவாஜி கணேசனைவிட பெரிய நடிகர் ஓ.பன்னீர்செல்வம் என்று தினகரன் அணிக்கு தாவிய பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்றுள்ளார் பரிதி இளம்வழுதி. திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியலில் அமைதியாக இருந்து வந்த பரிதி இளம்வழுதி, அதிமுகவில் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிளவுபட்டபோது, ஓபிஎஸ் அணியின் பக்கம் சென்றார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு வாக்களிக்கு வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிரையில் அடைக்கப்பட்ட தினகரன் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தினகரனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து வந்த பரிதி இளம்வழுதி, இன்று தினகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.
இது தொடர்பாக பரிதி இளம் வழுதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓ.பன்னீர் செல்வத்தின் நடிப்பை பார்த்து ஏமாந்துவிட்டேன். சிவாஜி கணேசனைவிட பெரிய நடிகர் ஓ.பி.எஸ். அ.தி.மு.கவை வலுப்படுத்த சரியான தலைவர் டி.டி.வி.தினகரன்தான். கட்சியிலிருந்து பிரிந்துபோன பல முக்கிய நிர்வாகிகள் இனி தினகரனை சந்திக்க வருவார்கள் என்று தெரிவித்தார்.