பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான உள்ளூர் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் கூறினார்.
சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் நடராஜன் வெளியிட்ட அறிவிப்புகள்:
பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு சுற்றுலா தலத்துக்கு, ஒருநாள் சுற்றுலா சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்காக 32 மாவட்டங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.64 லட்சம் செலவிடப்படும்.
ராமேசுவரம், மாமல்லபுரம், கொடைக்கானல், ஏற்காடு, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 6 இடங்களில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலுக்கு தலா ரூ.9.54 லட்சம் செலவில் புதிய வர்த்தக சலவை இயந்திரங்கள் வாங்கப்படும்.
கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருச்சி, திருச்செந்தூர், ஏற்காடு, ஒகேனக்கல், காஞ்சிபுரம், ராமேசுவரம் ஆகிய இடங்களில் செயல்படும் தமிழ்நாடு ஓட்டல்களுக்கு ரூ.25 லட்சம் செலவில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள சுற்றுலா அலுவலகங்களுக்கு புதிய மடிக் கணினி, பிரிண்ட்டர், ஸ்கேனர் ஆகிய உபகரணங்கள் ரூ.40 லட்சம் செலவில் வாங்கப்படும்.
உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. திருச்சியில் இந்த ஆண்டு சுற்றுலா தினம் கொண்டாடுவதற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றார்.