தமிழகத்தில் ரூ.451.83 கோடியில் கட்டப்பட்ட 273 பள்ளிக் கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடந்த காணொலிக் காட்சி மூலம் புதிய கட்டடங்களை அவர் திறந்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டம் முத்தனூர், துரிஞ்சிக்குப்பம், பாச்சல் என 15 இடங்களிலும், புன்னைப் புதுப்பாளையம், முனுகப்பட்டு, பெரியகோளாப்பாடி ஆகிய இடங்களிலும் கட்டப்பட்ட அரசு உயர் நிலைப் பள்ளி கட்டடங்களை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருச்சி, நீலகிரி, சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், நாகை, திருப்பூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 205 பள்ளிக் கட்டடங்கள் திறக்கப்பட்டன.
நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 49 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
கரூர் மாவட்டம் கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம், ஆய்வுகம், கழிவறைகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றையும் திறந்தார்.
மொத்தமாக ரூ.451.83 கோடியில் 273 பள்ளிக் கட்டடங்களை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.