கமுதி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் காட்டு பகுதியில் இருந்து மயில்கள் தண்ணீர், இரை தேடி கிராமங்களுக்குள் வந்துள்ளது. அவற்றுக்கு பல்வேறு கிராமத்தினரும் உணவு, தண்ணீர் அளித்து பாதுகாத்து வருகின்றனர்.
கமுதி சுற்றுப்பகுதியில் ஆறுகள், நீர் நிலைகள், ஓடைகள், கண்மாய், குளம், குட்டை ஏரிகள் மற்றும் வனப் பகுதிகளில் ஏராளமான மயில்கள், புள்ளிமான், குள்ள நரி, கீரி, முயல், கவரிமான் போன்ற பறவைகள், விலங்குகள் உள்ளன. தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமா விலங்குகள், பறவைகள், உணவு, தண்ணீர் தேடி கிராமங்கள், மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன.
அவற்றை கொம்பூதி, கோவிலாங்குளம், வில்லனேந்தல், ஆரைகுடி, காத்தனேந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் உணவு , தண்ணீர் வழங்கி பாதுகாக்கின்றனர். இதற்காக தனியாக இடங்களை ஒதுக்கி அதில் உணவு மற்றும் தண்ணீரை வைக்கின்றனர்.