புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு தொடர்பாக நீதி விசாரணை கோரி புதுவையிலும் இன்று புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு நீதி விசாரணை கோரி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். அதே போல் புதுவையில் குயவர்பாளையயம் சாரம் பாலம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் பேரவை அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் காசிலிங்கம், மாநில இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வெங்கடசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
உண்ணாவிரதத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் உள்ளது. அவரது சொத்துக்காகவும், பதவிக்காகவும் ஆசைப்பட்டு திட்டமிட்டு செய்த கொலையாகும். சிபிஐ விசரணை செய்தால்தான் பல்வேறு உண்மைகள் வெளியே வரும்.
ஓபிஎஸ் சிபிஐ விசாரணை கேட்டவுடன் எய்ம்ஸ் மற்றும் அப்போலோ மருத்துவர்களிடம் தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிக்கையை வாங்கி வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையிலும் முரண்பாடு உள்ளது.
அதாவது அப்போலோ கொடுத்த அறிக்கையில் முதலில் ஜூரம் என்று சிகிச்சைக்கு ஜெயலலிதா சேர்க்கப்பட்டதாகவும், குணமடைந்து 3-ம் நாளில் அவர் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால், எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 நாளும் நினைவு இல்லாமலேயே ஜெயலலிதா இருந்தார் என்று கூறியுள்ளனர். எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உண்மையை வெளிக்கொண்டுவர போராடுவோம் என்றார் ஓம்சக்தி சேகர்.