தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் இறங்கி விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டக் கிளை சார்பில் சிந்துபூந்துறை தாமிரவருணி ஆற்றில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, அமைப்பின் மாநில பொதுச் செயலர் பெ. சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் பி. வேலுமயில் (நெல்லை), கே.பி. பெருமாள் (தூத்துக்குடி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலக் குழு உறுப்பினர் தி. கணபதி, மாவட்டத் தலைவர் உ. முத்துப்பாண்டியன், துணைத் தலைவர்கள் பி. சுப்பையா, டி. சீனிவாசன், எம்.எஸ். நல்லசாமி, துணைச் செயலர்கள் எம். கண்ணன், என்.எஸ். கணேசன், பொருளாளர் எம். ராமகிருஷ்ணன், எஸ்.கே. பழனிச்சாமி, பி.கற்பகம், கே.ஏ. மல்லிகா உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மாநில பொதுச் செயலர் பெ. சண்முகம் கூறியது:
தாமிரவருணி ஆற்றில் மழைக் காலங்களில் மட்டுமே உபரிநீர் செல்கிறது. ஆனால், ஆண்டு முழுவதும் தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுவது ஏற்புடையதல்ல.
விவசாயம், குடிநீர்ப் பயன்பாட்டுக்கு பற்றாக்குறை இருக்கும் நிலையில், குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் உபரிநீர் வழங்குவதாக அறிக்கை அளித்த பொதுப்பணித் துறை செயலர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். தாமிரவருணி நதியைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, நதியைப் பாதுகாக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.