தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் எண்ணம் இருக்கிறதா?இல்லையா? என மாநில தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, 'உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நான் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்தும் கேட்டு தெரிவியுங்கள்' என, மாநில தேர்தல் ஆணைய தரப்பு வழக்குரைஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, பிற்பகலில் தேர்தல் ஆணைய தரப்பு வழக்குரைஞர் பி.நெடுஞ்செழியன் நேரில் ஆஜராகி, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது' என்றார்.
இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன், ஏற்கெனவே, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக நிலுவையிலுள்ள வழக்கை ஏப்ரல் 3 -ஆம் தேதிக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிடுகிறேன். அன்றைய தினம் இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.