போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கருடன் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
காப்பீட்டுப் பிரீமியம் கட்டண உயர்வு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து தென் மாநிலங்களில் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர். அதன்படி லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் தொடங்கியது. தமிழகத்தைப் பொருத்தவரை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தால் சுமார் 4 லட்சம் லாரிகள் இயங்காது என்றும், இதனால் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் குமாரசாமி தெரிவித்தார். தென்மாநிலங்களை பொறுத்தவரை சுமார் 30 லட்சம் லாரிகள் இயங்காது என்றும், பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை இந்த வேலைநிறுத்தம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரை, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது டீசல் மீதான வாட்வரி, வேகக்கட்டுப்பாடு கருவி அமைப்பதில் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.