புதுச்சேரி: மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கம்பராமாயணம் தெளிவாக விளக்கிறது என புதுவை முதல்வர் வி.நாராயணசாமி புகழாரம் சூட்டினார்.
புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் 3 நாள்கள் கம்பன் விழா நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நகராட்சி கம்பன் அரங்கில் நடைபெற்றது.
கம்பன் கழகப் பொதுச் செயலரும், புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான விபி.சிவக்கொழுந்து அறிமுகவுரை ஆற்றினார். முதல்வரும், கழகப் புரவருமான வி.நாராயணசாமி வரவேற்றுப் பேசியதாவது:
கம்பராமாயணத்தில் ராம பிரானின் சிறப்புகள் குறித்து கம்பர் சிறப்பாக விளக்கியுள்ளார். மனிதனாகப் பிறந்த ராமர், அன்னையின் கட்டளையின்படி வனவாசம் சென்றது, அவரது சொல்லுக்கு சகோதரர்கள் அடிபணிதல், ராமரின் பாதுகைகளை வைத்து பரதன் ஆட்சி செய்தது, சீதை கடத்தப்பட்டது, மாற்றான் மனைவியை கவர்ந்து சென்றவருக்கு ஏற்படும் அழிவு என பல்வேறு அம்சங்களை கம்பர் விளக்கியுள்ளார். மொத்தத்தில் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கம்பராமாயணம் விளக்குகிறது.
கம்பன் விழாவுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான் வழக்குரைஞராக இருந்தபோது, ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன். கம்பன் விழாவில் இடம் பெறும் கவியரங்கள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்றவை அனைத்தும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன என்றார் முதல்வர் நாராயணசாமி.