கடும் வறட்சி காரணமாக வைக்கோல், சோளத் தட்டை கிடைக்காமல் கால்நடைகளை கால் வயிற்றுத் தீவனத்துடன் தவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரிவரப் பெய்யவில்லை. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல், சோளத்தட்டை கிடைக்கவில்லை. ஒரு ஏக்கர் வைக்கோல் ரூ.17 ஆயிரம் வரை விலை போகிறது. கோடை மழையும் இல்லாததால், மேய்ச்சலுக்கு பசுமை இன்றி கால்நடைகள் தீய்ந்து கருகிய புல்களை தின்று உயிர் வாழ்கின்றன.
சுமார் 7 அல்லது 8 கிலோ கொண்ட வைக்கோல் கட்டு ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மேலூரை அடுத்த வெள்ளலூர் சுற்று வட்டாரத்தில் பசுக்களை வளர்ப்போர், கரும்பு வெட்டு நடைபெறும் தோட்டங்களில் இருந்து கரும்புத் தோகைகளை கட்டிவந்து பசுக்களுக்கு கொடுக்கின்றனர். அதுவும் போதுமான அளவு கிடைக்கிவில்லை.
விலைக்கு வைக்கோல், தீவனம் வாங்கித் தர முடியாத நிலைய உள்ளதால், கால் வயிறு, அரை வயிற்றுக்கே தீவனம் கொடுக்கின்றனர்.
தற்போது தஞ்சாவூர் மாவட்ட பகுதியில் கிணற்று பாசனத்தில் நடவுசெய்த நெல் அறுவடையாகிறது.
அதை வைக்கோல் தேவைப்படுவோர் தனியாகவோ சிலர் சேர்ந்தோ சென்று வாங்குகின்றனர். ஒரு ஏக்கர் வைக்கோல் ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கி அதை 50 கட்டுகளாக ஒரு கட்டுக்கு ரூ.35 கட்டுக் கூலி, லாரியில் ஏற்ற ரூ.15 கூலி கொடுத்து கொண்டு வருகின்றனர்.
வருணபகவான் கருணை காட்டி மழை பொழிந்தால் வயல்பகுதிகளில் புல்கள் தழைக்கும். அதுவரை கால்நடைத்துறை மானியவிலையில் கிலோ ரூ.2-க்கு வைக்கோல் வழங்குவதை தட்டுப்பாடின்றி வழங்கவேண்டும். இல்லையேல் கால்நடைகளது நிலை மிகவும் கவலைக்கிடமாகும் என்கின்றனர் கால்நடைவளர்ப்போர்.