சென்னை: தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் நீண்ட காலமாக காலியாக இருந்தது.
இதனால் அண்ணா பல்கலைக்ழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவே நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் பல மாணவர்களின் மேற்படிப்பு, வேலை உள்ளிட்டவைகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
துணைவேந்தரை நியமிக்க கோரி மாணவர் அமைப்பினர் முற்றுகை போராட்டங்கள் நடத்தினர். மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் வற்புறுத்தி வந்தார்கள்.
இந்நிலையில், மூன்று பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட துணைவேந்தர் தேடல் குழு ஆலோசனை நடத்தியது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று மூன்று பெயர்களைக் கொண்ட துணைவேந்தர்கள் பெயர் பட்டியலை பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான வித்யாசாகர் ராவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் துணை வேந்தர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களை 25, 26 ஆம் தேதிகளில் நேரில் வரவழைத்து நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.