சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த கறுப்பு சட்டை மற்றும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உருவம் பதித்த டி-சர்டுகள் அணிந்து வந்த 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17-ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அஞ்சலி செலுத்த மே 17 என்ற இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து சில இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டவிதிகள் அமலில் உள்ள சென்னை மெரினா கடற்கரையில் அனுமதி வழங்கப்படாத நிலையில், தடையை மீறி கூடவோ, கூட்டம் நடத்தவோ போலீஸார் தடை விதித்திருந்தனர். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், துணை ஆணையர் தலைமையில் போலீஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று மெரினாவில் கூட்டம் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து கண்ணகி சிலை முதல் உழைப்பாளர் சிலை வரையில் உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் பிரபாகரன் உருவம் பதித்த டி-சர்ட்டுகள், கருப்பு சட்டை அணிந்து வந்த 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 40 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.