சென்னை: தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த குற்றச்சாட்டுக்கு, ஹாட்சன் பால் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹாட்சன் பால் நிறுவனத் தலைர் சந்திரமோகன், 42 வகை பரிசோதனைகளுக்குப் பிறகுதான் பால் விற்பனைக்கு வருகிறது. அமைச்சர் சொல்வது போல தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் கலக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை.
தனியார் பால் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்திய அளவில் ஆரோக்யா பால் தான் நம்பர் ஒன். விவசாயிகளிடம் இருந்து தான் பாலை கொள்முதல் செய்து விற்கிறோம். இடைத்தரகர்களிடம் பால் கொள்முதல் செய்வதில்லை. எனவே இது குறித்து ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன.
தர ஆணையச் சான்று பெற்றே பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பாலில் ரசாயனம் கலக்கப்படுவதில்லை. பால் மற்றும் பால் பொருட்களிலும் ரசாயனம் இல்லை. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் எங்கள் வணிகத்தை நடத்துகிறோம். 47 ஆண்டுகளாக பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளோம். இன்றைய தேதியில் ஆரோக்கியா பால் தான் அதிகமாக விற்பனையாகும் தனியார் பால்.
கொள்முதல் செய்வது முதல் விற்பனை செய்யும்வரை அனைத்தும் கண்காணிக்கப்பட்டு தரப்பரிசோதனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்யும்போது, அதற்கான விலையை, விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கின் மூலமாகத்தான் தருகிறோம் என்று கூறினார்.