ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்புப் பணியில் நம்பகத்தன்மை இருக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, அமராவதி, உடுமலை என 6 வனச் சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
இங்கு புலி, யானை, சிறுத்தை, வரையாடு, பல வகையான பறவைகள், மான்கள், அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன. மேலும், பல விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகளைகளும் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட குழிப்பட்டி, குறுமலை, மாவடப்பு ஆகிய பகுதிகளில் இருந்த சந்தன மரங்கள் 2009-இல் வெட்டிக் கடத்தப்பட்டன. இதையடுத்து, வனத் துறையினர் சிலர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் உலாந்தி வனச் சரகத்தில் புலிகள் வேட்டையாடப்பட்டதாக சூழலியல் செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்தனர். உலாந்தி வனச் சரகத்தில் 2011-இல் பல கோடி மதிப்பிலான 1,400-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன. அதே காலகட்டத்தில், தடுப்பணைகள் கட்டியதிலும் வனத் துறையினர் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.
இப்படி தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்து, சூழல் செயல்பாட்டாளர் மோகன்ராஜ், இயற்கை ஆர்வலர் வினோத்குமார் ஆகியோர் கூறியதாவது: வனப் பகுதியில் வனத் துறையினர் மட்டும் தனியாக நடத்தும் கணக்கெடுப்பில் உண்மைத் தன்மை இருக்க வாய்ப்பில்லை. தன்னார்வலர்கள், மாணவர்கள், விவசாயிகள் என பல தரப்பினரையும் இதில் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் கணக்கெடுப்பில் நம்பகத் தன்மை இருக்கும். வன உயிரினங்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமையும் என்றனர்.
பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், ஆண்டில் பலமுறை நடைபெறும் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு குறித்துத் தகவல் தர மறுப்பதுடன், கணக்கெடுப்பு குறித்து செய்தி சேகரிக்கச் செல்லவும் வனத் துறையினர் அனுமதி மறுப்பதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பொள்ளாச்சி வனத் துறை அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.