சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்: தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது.
இதன் விளைவாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவற்றின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக் கூடும்.
மழை விவரம்: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 50 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி 40 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 30 மி.மீ., புதுச்சேரியின் காரைக்கால், தூத்துக்குடி மாவட்டத்தின் கழுகுமலையில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம், நாங்குநேரி, செங்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.