மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தடையாக இருக்கிறார் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
கேரள மாநிலம், பாலக்காட்டில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமானம் மூலம் கோவைக்கு திங்கள்கிழமை வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சிக்குப் பதிலாக பாதிப்புகள்தான் அதிகரித்துள்ளன. வேலை வாய்ப்பு தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. புதுவையில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கும் நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அதற்குத் தடை போடுகிறார்.
மக்கள் நல திட்டத்தை நிறைவேற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் உண்டு. அதனை முடக்க, நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு உரிமை இல்லை. மாநில அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீட்டால் அதிகம் பாதிக்கப்பட்டது புதுவைதான். மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கோ, துணை நிலை ஆளுநருக்கோ அதிகாரம் இல்லை.
மத்திய அரசு நிதி அளிக்காவிட்டாலும் நலத் திட்ட உதவிகளை நாங்கள் நிறுத்தவில்லை. ஆனால் தாமதமாவதற்கு துணை நிலை ஆளுநர்தான் முக்கியக் காரணம் . மத்திய அரசுக்கு வருமான வரித் துறை மூலம் சோதனை நடத்த அதிகாரம் உண்டு. ஆனால் மத்திய அரசுக்குப் பணியாத நபர்கள், வியாபாரிகளை பணிய வைக்க இந்தச் சோதனைகள் நடைபெறுகின்றன. ஆகவே, வருமான வரி சோதனையில் பாரபட்சம் கூடாது. ஜி.எஸ்.டி. வரியால் புதுவையில் 30 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருள்கள் மீதான வரியை 12 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.