திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உயிரிழந்த ஓய்வுபெற்ற ஆசிரியரின் உடல், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
தாராபுரம், தென்தாரை பகுதியைச் சேர்ந்தவர் வே.பழனிசாமி (90). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், அப்பகுதியில் அய்யன் திருவள்ளுவன் இலவசப் படிப்பகத்தை நடத்தி வந்தார். கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டதுடன், உடலும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
ஆசிரியர் பழனிசாமியின் இரு மகன்கள், மகள்கள் என குடும்பத்தினர் அனைவருமே உடல் தான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.