தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்க வேண்டும் என்றார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.
ராமேசுவரம் அருகே பாக் நீரிணைப் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் திங்கள்கிழமை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆரோக்கியதாஸ் பிச்சை, ஜான்சன் ஆகியோர் பிளாஸ்டிக் குண்டுகள் கைகளில் பாய்ந்து காயமடைந்தனர். இதையடுத்து மீனவர்கள் இருவரும் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசு தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கவும், மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றவும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கவில்லை. இந்த சூழலில் கடலோரக் காவல் படையினரே மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்க வேண்டும். மேலும், இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி எடுக்க வேண்டும் என்றார் அவர்.