பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தனிச் சட்டம்: ராமதாஸ்
காதல் என்ற பெயரால் பெண்களைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்வதைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை ஆதம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த பட்டதாரிப் பெண்ணான இந்துஜாவை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் அப்பெண்ணின் தாயாரும், சகோதரியும் தீக்காயம் அடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். காதல் உன்னதமானது என்பதில் ஐயமில்லை. ஆனால், இருவர் மனதும் உடன்படும்போது ஏற்படுவதுதான் காதல். காதலிக்க விரும்பவில்லை என்று இந்துஜா கூறிவிட்ட நிலையில் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்தது அரக்கத்தனமான செயல்.
ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும். பெண்களைப் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இதற்காக மகளிரைக் கொண்ட தனிக் காவல் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் தனிச்சட்டமும் இயற்றப்பட வேண்டும்.