திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்காக புதன்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 47,117 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது. இந்த ஆண்டில் குடிநீருக்காகவும், பாசனத்துக்காகவும் அணையில் ஒரு சில முறை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. குறுவை சாகுபடிக்காக மொத்தம் 120 நாள்களுக்கு முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரூர் வரையில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு அக்டோபர் 1-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் 47,117 ஏக்கர் பயன் பெற்றது. இந்நிலையில் இதே பகுதிகளுக்கு 2-ஆவது சுற்றாக அணையில் இருந்து புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அணையைத் திறந்துவைத்தார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, ஈரோடு மக்களவை உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்போதைய தண்ணீர் திறப்பால், திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 416 ஏக்கர், கரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 451 ஏக்கர் என மொத்தம் 21 ஆயிரத்து 867 ஏக்கர் பயன் பெறும்' என்றனர்.