சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகைக்குள் அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது என்று ஆளுநர் பன்வாரிலால் வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக ஆளுநர் மாளிகையில் விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சைவ மற்றும் அசைவ உணவுகள் சமைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், ராஜ்பவன் என்று அழைக்கப்படும் ஆளுநர் மாளிகைக்குள் அசைவ உணவுகள் சமைக்கப்படக் கூடாது என்று ஆளுநர் பன்வாரிலால் வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே சமயம், அசைவ உணவு சாப்பிட விரும்புவோர் வெளியே சென்று சாப்பிடலாம் என்றும் அவர் கூறியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம், கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் நேரில் ஆய்வு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கடும் விமரிசனத்தை முன் வைத்தனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் திடீர் ஆய்வை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுக்குத் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.