மக்களின் நிலைமை குறித்து அறிய மேற்கொள்ளும் ஆய்வை நிறுத்த மாட்டேன் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திட்டவட்டமாக தெரிவித்துளளார்.
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வார இறுதிநாட்களில் பல்வேறு இடங்களுக்கு ஆய்வுக்கு வழக்கமாக சென்று வருகிறார். அதன்படி சனிக்கிழமை தொண்டு அமைப்புகள் மற்றும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று வேல்ராம்பட்டு ஏரிக்கரையை ஆய்வு செய்தார். பின்னர் ஏரிக்கரையினை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணியையும் துவக்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் மீண்டும் தனியாகவும் ஆய்வுக்கு செல்வேன். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள ஆளுநராக சென்றால் முடியாது. பொதுவான நபராக பொதுமக்களோடு மக்களாக சென்றால் தான் உண்மை நிலை தெரியும்.
மேலும் பல்வேறு தரப்பிடமிருந்து வரும் புகார்கள் குறித்து ஆய்வு செய்ய செல்லும் போது காவல் துறை உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து விட்டுத்தான் செல்கின்றேன். எனக்கு போலீசாரும் உரிய பாதுகாப்பு வழங்குகின்றார்கள்.
புனரமைக்கப்பட்ட வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் இளைஞர் முகாமுக்காக வந்துள்ள பல்வேறு மாநில மாணவர்களோடு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.
கடந்த 23-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவையில் பேசிய எம்.எல்.ஏக்கள்ஆளுநர் கிரண்பேடி காவல் துறைக்கு தெரிவிக்காமல் தனியாக இருசக்கர வாகனத்தில் ஆய்வுக்கு செல்கின்றார். மேலும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பிரச்னைகள் ஏற்படுகின்றன எனக்கூறியிருந்தனர். இதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. இது குறித்து அவருக்கு பலமுறை அறிவுறுத்தியும் மீண்டும் இரவு நேரங்களில் ஆய்வுக்கு சென்று வருகின்றார். ஆகவே இது போன்று காவல் துறைக்கு தெரிவிக்காமல் தனியாக வெளியில் செல்லும்போது ஏற்படும் அசம்பாவித சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்காது என மத்திய உள்துறையிடம் தெரிவித்துள்ளேன் எனக் கூறியிருந்தார்.