கோவையிலுள்ள மத்திய அரசு அச்சகத்தை நிரந்தரமாக மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியா முழுவதும் மத்திய அரசின் 17 அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஒருங்கிணைத்து 5 அச்சகங்களாக குறைக்க செப்டம்பர் 21 -ஆம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார். தமிழகத்தில் கோவை, கேரளத்தில் கொரட்டி, கர்நாடகத்தில் மைசூரு ஆகிய இடங்களில் உள்ள மூன்று மத்திய அரசு அச்சகங்களை நிரந்தரமாக மூடிவிட்டு, அவற்றை மஹாராஷ்டிரத்தில் உள்ள நாசிக் அச்சகத்துடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கோவையில், காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1960 -இல் உருவாக்கப்பட்ட மத்திய அரசு அச்சகம் 132.7 ஏக்கர் பரப்பளவில் மிக சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது திடீரென அச்சகத்தை மூட முடிவு செய்திருப்பது, அங்கு பணிபுரியும் பணியாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் என்பதுடன், சொத்துக்களையும் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.