திருவாரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 23,250 பறிமுதல்
திருவாரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 23,250-ஐ பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலம் விற்பது, வாங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், நாகப்பட்டினத்திலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆய்வாளர்கள் ரத்தினவள்ளி, மனோகரன் ஆகியோர் தலைமையில் 6 பேர் கொண்ட காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் திருவாரூர் சார் பதிவாளர் அலுவலகத்தை மூடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனை புதன்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது.
சார் பதிவாளர் பசுபதி மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் 9 ஊழியர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, ரசீது மூலம் பெறப்பட்ட தொகை கணக்கிடப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ. 23,250-ஐ பறிமுதல் செய்து, 14 ஆவணங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
சார் பதிவாளர் பசுபதி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.