முதல்வர் பழனிசாமியுடன் கருத்து வேறுபாடா? ஓ. பன்னீர்செல்வம் விளக்கம்
புது தில்லி: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக வந்த தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
துணை முதல்வராக பதவியேற்ற பிறகு, புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை முதல் முறையாக சந்தித்துப் பேசினார் ஓ. பன்னீர்செல்வம்.
பிரதமருடனான சந்திப்பு பற்றி வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதிலும்:
பிரதமரிடம் எந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்தினீர்கள்?
தமிழக மின் உற்பத்தி குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்தினேன். தமிழகத்துக்கு ஆண்டு முழுவதும் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை வழங்குமாறுக் கோரினேன்.
அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு திட்டங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி அளித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்தேன்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரிதமரிடம் கூறினேன். தேவையான உதவிகளைச் செய்வதாக அவரும் உறுதி அளித்தார்.
முதல்வர் பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு என்று சொல்லப்படுகிறதே?
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை.
ஜெயலலிதா இருந்த போது பச்சை நிறத்தில் இருந்த கட்சி பேனர்கள் தற்போது காவி நிறத்தில் மாறியது ஏன்?
இப்போது பிரதமரை சந்தித்துவிட்டு வெளியே வந்துள்ளேன். இப்போது என்ன கேள்வி கேட்க வேண்டுமோ அதை மட்டும் கேளுங்கள்.
இரு அணிகள் ஒன்று சேர்ந்த போது உங்கள் அணியால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் நறைவேற்றப்பட்டதா?
தர்ம யுத்தம் முடிந்து நிபந்தனைகள் எதுவும் இல்லாமல்தான் இணைந்தோம்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால்தான் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளாரே?
அப்படி ஸ்டாலின் கூறவில்லை. அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கும் டெங்கு பாதிப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
கட்சிக்குள் உங்களுக்கு ஏதோ மன வருத்தம் இருப்பதாகக் கூறுப்படுகிறதே?
45 ஆண்டுகாலம் கட்சியை வளர்க்க இரு தலைவர்களும் எதற்காகப் பாடுபட்டார்களோ அதற்காகவே தற்போது அந்த கட்சியின் ஆட்சி சிறப்பான முறையில் நடந்து வருகிறது. எம்ஜிஆர் காலத்திலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும் நாங்கள் எப்படி இருந்தோமோ, அந்த நிலையில்தான் தற்போதும் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
அதிமுகவில் இனி பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.