சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முன்வந்தால் மத்திய அரசு உதவ தயாராக உள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார்.
புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முத்ரா சிறப்பு முகாமில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
குறிப்பாக மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்தி வரும் "உதான்' திட்டம் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை 32 நகரங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் விமான பயணம் மேற்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்துவதாகும்.
புதுச்சேரி - ஹைதராபாத் இடையேயான விமான சேவை சிறப்பாக உள்ளது. இதர நகரங்களுக்கும் விமான சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்தத் தேவையான நிலம் தமிழகப் பகுதியில் இருந்து பெற வேண்டியுள்ளது. அந்த நிலத்தைப் பெற்றுத் தருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
சென்னையில் விமானப் போக்குவரத்து சீராக உள்ளது. நாளுக்கு நாள் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள விமான நிலையத்தின் பயன்பாடு, இன்னும் சில காலத்துக்குப் பின்னர் நெருக்கடியாக இருக்கும். எனவே, இரண்டாவது விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முன் வந்தால் மத்திய அரசு அதற்கான உதவிகளைச் செய்யும்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் நிலையை ஆராய நிதியமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பது, செம்மையாகச் செயல்படச் செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள், நிபுணர்களிடமும் கருத்துகள் கோரப்பட்டுள்ளன.
விமானப் போக்குவரத்து, சுற்றுலா ஆகியவை மூலம் எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார் அமைச்சர் கஜபதி ராஜு.