வாசலில் சாணம் தெளித்தால்.. செல்லூர் ராஜூவை கிண்டல் செய்த ராமதாஸ்
சென்னை: டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த வீட்டு வாயிலில் சாணம் தெளிக்க வேண்டும் என்று கூறிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்தை, பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த, வீட்டு வாயிலில் சாணம் தெளிக்க வேண்டும் என்றார். அவர் அதனை சொல்லும் போதே, இதை வைத்து யாரும் விமரிசித்து விடக் கூடாது என்பதற்காக விளக்கமாகவே கூறினார்.
அதாவது, மொசைக் தரைப் போட்ட வாயிலில் சாணம் தெளிக்கச் சொல்லவில்லை. தனியாக மண் வாசல் இருக்கும் வீடுகள் போன்வற்றில் மட்டுமே சாணம் தெளிக்கலாம் என்று சொல்கிறேன். சாணம் தெளிப்பதால் பூச்சிகள் அண்டாது. கிருமிகள் பரவாது என்பதால்தான் சொல்கிறேன் என்று தெளிவாக விளக்கினார்.
செல்லூர் ராஜூவின் இந்த ஆலோசனை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்துக் கூறியுள்ளார். அதாவது, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது, "வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு கொசு வராது: செல்லூர் ராஜூ - அறிவியல், மருத்துவம் அத்தனைக்குமான நோபல் இவருக்குத்தான் தர வேண்டும்!" என்று கூறியுள்ளார்.