ராசிபுரத்தை அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை வைரஸ் காய்ச்சலால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் டிராக்டர் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு அனுஷ்யா (2) , அஜய் (ஒரு வயது) ஆகிய இரு குழந்தைகள்.
இந்நிலையில், குழந்தை அஜய் கடந்த 4 நாள்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை அஜய் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தது. மேலும், ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 பேர் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.