சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு புதுவை கடற்கரையில் துப்புரவு பணி
இந்திய கடலோரக்காவல்படை புதுச்சேரி தலைமையகம் சார்பில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு கடற்கரையில் துப்புரவு பணி இன்று
நடைபெற்றது.
சுற்றுச்சூழலை பாது காக்கவும், கடலோரம் மாசுபடுவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ம் தேதி சர்வதேச கடலோர தூய்மை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
அது போல் நிகழாண்டும் இந்திய கடலோர காவல்படை, புதுவை உள்ளாட்சித் துறை, என்.எஸ்.எஸ். மற்றும் புதுவை கடலோர மேலாண்மை ஆணையம் சார்பில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடைபிடிக்கப்பட்டது.
புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நலத்த்துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு கடற்கரை சாலை மற்றும் கடலோர பகுதி தூய்மை செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்கடலோர காவல்படை டி.ஐ.ஜி. தியாகி, உதவி கமாண்டன்ட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தூய்மை பணியில் கல்லூரி மாணவ - மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்று துப்புரவு பணி மேற்கொண்டனர்.
இதே போல் காலாப்பட்டு, ஆரோவில், புதுக்குப்பம், மூர்த்திக்குப்பம், நரம்பை, வீராம்பட்டினம், சோலைநகர் கடற்கரையோர பகுதிகளிலும் தூய்மைப் பணி
மேற்கொள்ளப்பட்டது.