டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி., (தென்காசி-தனி) வசந்தி முருகேசன், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வசந்தி முருகேசன் கூறியது: எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்திச் சென்றார். தனக்குப் பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கட்சியை யாரும் அழித்து விட முடியாது என்றார் அவர்.
இந்தக் கட்சி நூறாண்டு காலத்துக்கு மக்களுக்காகவே இயங்கும். ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற முதல்வர், துணை முதல்வர் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்கிறார்கள். அவர்களுடன் இணைந்து நானும் பணியாற்றுவேன். இந்த ஆட்சியை திமுகவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அழித்து விடுவேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? இதனால், தொண்டர்கள் கோபமடைந்துள்ளனர். இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சி.
வேறு அணிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முதல்வருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தனியாக சிறை பிடித்து வைத்துள்ளனர். வாக்களித்த மக்களுக்காக அவர்கள் பணியாற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் தனியாகப் போய் தங்கியுள்ளனர். ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்ந்து நடைபெற வேண்டும்.