நூற்று எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் ஆந்திர, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வந்த அவரை, மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, வட்டாட்சியர் கார்குழலி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள கடைக்குச் சென்று வழிபாட்டுக்கு தேவையான தேங்காய், பூ, பழம், உப்பு, மிளகு, பால், வெல்லம் ஆகியவற்றை வாங்கினார். இதைத்தொடர்ந்து, ஆளுநர் நரசிம்மனுக்கு தேவஸ்தான பிரதிநிதி சம்பத், நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதை அளித்து, கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அவர், வைத்திய வீரராகவ பெருமாளை வணங்கினார். பின்னர், கோயில் குளத்தில் வெல்லம், பால் கரைத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.
நவராத்திரியை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளையும் ஆளுநர் நரசிம்மன் பார்வையிட்டார். பின்னர் அவரை கோயில் வாசல் வரை வந்து அரசு அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் கார் மூலம் சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர்.
ஆந்திர மாநில ஆளுநர் வருகையையொட்டி, பூந்தமல்லி முதல் திருவள்ளூர் கோயில் வரையில் டி.எஸ்.பி. புகழேந்தி தலைமையில் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அதேபோல் காலை 9 மணி முதல் 10 மணி வரை கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.