விஷ காய்ச்சல் பாதிப்பு காரணமாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. போதிய மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் சிகிச்சைக்கு நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.
பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு தினமும் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்வது வழக்கம். உள் நோயாளியாக 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக இந்தப் பகுதியில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளது. தற்போது, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு புற நோயாளிகளாக சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மேல் சிகிச்சை என்ற பெயரில் கடலூர் அல்லது புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனராம்.
இந்த மருத்துவமனையில் 20 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், 15 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். 5 மருத்துவர்களின் பணியிடம் நீண்ட காலமாக காலியாக உள்ளதாம். பணியில் உள்ள மருத்துவர்களிலும் சிலர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றனராம்.
தற்போது மர்மக் காய்ச்சல் பரவி வரும் சூழலில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்கு சீட்டு வாங்கும் இடத்தில் தொடங்கி, மருத்துவரை சந்திக்கும் வரை நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த மருத்துவமனையில் நிலவும் மருத்துவர், பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்கவும், மர்மக் காய்ச்சலின் தாக்கத்தை தடுக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"போதிய மருத்துவர்கள் இல்லை'
பண்ருட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்புச்செல்வி கூறியதாவது: விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தைக் காட்டிலும் செப்டம்பர் மாதம் நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றார்.