தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பள்ளி சிறுவனை பக்கத்து வீட்டு வாலிபரே கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார், தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மகன் கிஷோர்(11). தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 23-ஆம் தேதி மாலை இவன் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவில் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த கிஷோர் வீடு திரும்ப வில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிஷோர் கிடைக்கவில்லை. இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையின்போது பக்கத்து வீட்டை சேர்ந்த தமிழ் வேந்தன் மகன் அரவிந்த்(21) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், சிறுவன் கிஷோரை கொலை செய்து அருகில் உள்ள காலி மைதானத்தில் புதைத்தது தெரியவந்தது.
அவர் காட்டிய அடையாளத்தை வைத்து சிறுவனின் பிணத்தை இன்று போலீஸார் தோண்டி எடுத்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து கொலைக்காரன் அரவிந்திடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று அரவிந்த் மது போதையில் சிகரெட் பிடித்தபடி வந்துள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை பார்த்து வேறு இடத்திற்கு சென்று விளையாடுங்கள் என சத்தம் போட்டுள்ளார்.
அதற்கு சிறுவன் கிஷோர் நீங்கள் வேண்டுமானால் வேறு இடத்திற்கு சென்று சிகரெட் பிடியுங்கள் என தெரிவித்துள்ளான்.
இதனால் ஆத்திரம் அடைந்த அரவிந்த் சிறுவன் கிஷோர் கழுத்தை பிடித்து தூக்கி உள்ளார். இதில், கழுத்து இறுகி சிறுவன் வாயில் இருந்து நுரை தள்ளி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளான்.
இதனால் பயந்து போன அரவிந்த் அப்பகுதியில் உள்ள காலி மைதானத்தை சிறுவனின் பிணத்தை புதைத்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்ததுள்ளது.
பக்கத்து வீட்டு வாலிபரே மது போதையின் வெறியால் 11 வயது பள்ளி சிறுவனை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.