மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1.69 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 14,774 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை நொடிக்கு 21,648 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், செவ்வாய்க்கிழமை காலை 82.83 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 84.52 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 1.69 அடி உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 46.60 டி.எம்.சி. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், இன்னும் ஒரு வார காலத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும். அப்போது சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.