வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக, காய்ச்சல் பரவி வருவதைத் தடுக்க போதிய சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை மாலை சேலம் வந்தார்.
இதையடுத்து, நலத் திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, டெங்கு தடுப்பு- விழிப்புணர்வுப் பணிகள் தொடர்பானஆய்வுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியது: தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. மேலும் காய்ச்சல் பரவி வருவதைத் தடுக்க போதிய சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்கூட்டியே திட்டமிட்டு காய்ச்சல் பரவாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுவதையும் அரசுத் துறையினர் முன்கூட்டியே திட்டமிட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் போதிய மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். நோயாளிகளுக்கு உரிய கவனம் செலுத்தி, சிகிச்சை அளிக்க வேண்டும். நிலவேம்பு கஷாயம் கொடுப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ், சுகாதாரத் துறை துணை இயக்குநர் பூங்கொடி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.